திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.111 பசுபதி - திருவிருத்தம்
சாம்பலைப் பூசித் தரையிற்
    புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண்
    டாயிருங் கங்கையென்னுங்
காம்பலைக் கும்பணைத் தோளி
    கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை
    யாளும் பசுபதியே.
1
உடம்பைத் தொலைவித்துன் பாதந்
    தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்
    டாயிரு ளோடச்செந்தீ
அடும்பொத் தனைய அழன்மழு
    வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை
    யாளும் பசுபதியே.
2
தாரித் திரந்தவி ராவடி
    யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண்
    டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
    வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை
    யாளும் பசுபதியே.
3
ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன்
    பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண்
    டாயண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப்
    பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை
    யாளும் பசுபதியே.
4
இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்
    பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண்
    டாயண்டம் எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை
    யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை
    யாளும் பசுபதியே.
5
அடலைக் கடல்கழி வான்நின்
    னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண்
    டாய்நறுங் கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ்
    சூளா மணிகிடந்து
படரச் சுடர்மகு டாயெம்மை
    யாளும் பசுபதியே.
6
துறவித் தொழிலே புரிந்துன்
    சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண்
    டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத்
    தேசெல்லு மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை
    யாளும் பசுபதியே.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
சித்தத் துருகிச் சிவனெம்
    பிரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்
    றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்கன் இருபது
    தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை
    யாளும் பசுபதியே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com